ஆலய வரலாறு


தோற்றுவாய்
முருகன் குமரன் குகன்என் றுமொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவும்
குருபுங் கவஎண் குணபஞ் சரனே.
                                                                                              -அருணகிரிநாதர்



இலங்கையின் வடபகுதியில் பண்டைஞான்று நாகர்கள் என்ற நாகரிகம் மிகுந்த குழுவினர் வாழ்ந்து வந்த படியால், அப்பகுதி நாகதீபம் என்றழைக்கப்படலாயிற்று. இந்நாட்டுக்குப் புண்ணியபுரம், காந்தருவ நகரம், வீணாகானபுரம், எருமை முல்லைத்தீவு, மணற்றிடர், மணற்றி, யாழ்ப்பாணம் எனப் பல பெயர்கள் வழங்கலாயின. இப் பெயர்க் காரணங்களை விளக்கப் பல கதைகளுமுண்டு.

நாகர்கள் ஆட்சிபுரிந்த காலத்தில் கந்தரோடையென இப்பொழுது வழங்கப்படும் கதிரமலை அல்லது கதுருகொடையே இராசதானியாக விளங்கியது. இந்த நாகர்கள் தமிழர் இனத்தின் பாற்பட்ட ஒரு திராவிட வகுப்பினர் எனச் சரித்திர ஆராய்ச்சியறிஞர் கருதுகின்றனர். பின்னர் தமிழர் சிறிது சிறிதாகச் செல்வாக்குப் பெற்றுத் தனியரசு நிறுவவும் முற்பட்டனர்.


கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கலிங்க அரசன் உக்கிரசிங்கன் கதிரைமலையரசைக்  கைப்பற்றி மாருதப் புரவல்லியெனும் சோழ ராசகுமாரியை மணந்து, பின்னர் கதிரைமலையை விட்டு நீங்கி, சிங்கை நகரைத் தன் இராசதானியாக்கினான். பருத்தித்துறைக்கண்மையில் மணல்மேடுகள் உள்ள வல்லிபுரமே சிங்கைநகராகப் பண்டைக்காலத்தில் விளங்கியது.

சிங்கை நகரும் நல்லூரும் :

சிங்கை நகரைப்பற்றிச் சரித்திரவாராய்ச்சி யறிஞர், சுவாமி ஞானப்பிரகாசர் பின்வருமாறு கூறுகின்றார் :

*“ஆதி ஆரியச்சக்கரவர்த்தி எடுப்பித்த யாழ்ப்பாண நகரி யாது? அது நல்லூராதல் கூடுமா? கூடாது என்பர் ஶ்ரீ இராசநாயக முதலியார். இவ் வியுற்பத்திமானின் அனுமானப்படி பருத்தித்துறை கணித்தாய் மணல்மேடுகள் பொருந்தியிருக்கின்ற வல்லிபுரமே பூர்வகாலச் சிங்கைநகராம். 

நல்லூர், புவனேகவாகுவெனப் பிற்படக் கோட்டை இராச்சியம் வகித்த செண்பகப்பெருமாள் பதினைந்தாம் நூற்றாண்டிற் கட்டுவித்ததாம். இம்மதம் எமக்கும் சம்மதம். வல்லிபுர மணற் கும்பிகளுள் காற்றுக் காலங்களில் அகப்படும் பழம் பொருட்கள், அங்கு பலவிடங்களிற் குவிந்து கிடக்கின்ற பூர்வகாலக் கல்லோடுகள், கீச்சுக்கிட்டம் ஆதியனவும், அங்கிருந்து கரை மார்க்கமாகப் போன பெரும் வீதியின் அடையாளங்களும் ஓர்நாள் விஸ்தார நகராய் விளங்கியது எனக் கரதலாமலகமாய்க் காட்டும். 

அப்பால் ஆரியச்சக்கரவர்த்திகள் தம் செல்வாக்கு நிரம்பிய நாட்களில் பெருங் கப்பற் படையுள்ளோராய்ப் பிரக்யாதி பெற்றுள்ளமையினால், அம் மரக்கலத்திரள் ஆழியிற் சுலபமாய்ச் சென்று திரும்புவதற்கு அநுகூலமான துறைமுகம் உள்ளோராய் இருந்தமை அவசியம். கேகாலைப் பகுதியிலுள்ள கொத்தகமத்திற் கண்டெடுத்த கல்வெட்டும் அன்னோரைப் பொங்கொலிநீர்ச் சிங்கை நகர் ஆரியர் எனச் சூசிப்பிக்கின்றது. பெருங்கடற் சமீபமும் சிறந்த துறைமுகப் பொலிவும் பொருந்தக்கொண்டது வல்லிபுரமே.

“சிங்கை நகர் வல்லிபுரத்தி லிருந்ததெனக் கொள்ளுதல் அமைவுடைத்தாயின், பறங்கிக்காரர் கி.பி. 1590 இல் கொழும்புத்துறையிலிறங்கி நல்லூரைச் சருவியகாலையில், சிங்கைநகரெனும் பெயரோடு ஓர் பெலத்த அரணிருந்ததென பாதர் குவேறோஸ்* கூறுகின்றமை எவ்வாறென ஓர் ஆசங்கை நிகழும். பூர்வ சிங்கைநகர் கொழும்புத்துறைக்கும் நல்லூருக்குமிடையிலாமெனக் கொள்ள வேறு சான்றில்லாமையால், அச்சிங்கைநகர் அழிந்து பட்டு நல்லுஸர் தலைநகராயின பின், அப்பழைய நகர்ப் பெயரோடு ஓர் அரண் இங்கு விளங்கியதெனக் கொள்ளலாம் என்க.

“ மேலே குறிப்பிட்டவாறு கி.பி. எட்டாம் நூற்றாண்டு தொடக்கம் சிங்கை நகரிலிருந்தரசாண்ட கலிங்க அரசனாகிய உக்கிரசிங்கனும் அவன் வழியினரம் சில காலம் பிறர் ஆட்சிக்குட்படாமலும் சிலகாலம் சோழ அரசுக்கும் பொலனறுவை அரசுக்கும் கீழடங்கியும் சிங்கை நகரில் அரசுபுரிந்து வந்தார்கள். 

இவர்கள் இராமேஸ்வரத்துப் பிராமண அரசகுடியிற் சம்பந்தஞ் செய்த பின், ஆரியவரசர் எனும் நாமம் புனைந்து இராமேஸ்வரத்தையும் தம் ஆளுகைக்குட்படுத்தி, அதனால் சேதுகாவலன் எனப் புதுப் பெயரையும் புனைந்து, இடபக் கொடியும் சேதுலாஞ்சனையும் பெற்றவர்களாய் பரராசசேகரன், செகராசசேகரன் எனும் சிங்காசனப் பெயர்களை மாறிமாறியுடையவர்களாய் அரசு செலுத்தி வந்தனர்.”

பேராசிரியர் திரு.க. கணபதிப்பிள்ளை அவர்கள் கருத்தின்படி ஆரியச்சக்கரவர்த்தி பாண்டிநாட்டுத் தண்டத் தலைவனாவான் :

*“பின்பு பாண்டி நாட்டில் மாறவர்மன் குலசேகரன் (கி.பி. 125- 1301) பட்டத்திற்கு வந்ததும் இலங்கைக்குத் தளபதியாக ஆரியச்சக்கரவர்த்தி என்னுந் தண்டத்தலைவனை அனுப்பினான். அவன் நாட்டை மேற்பார்வையிட்டுக் கொண்டு வட – இலங்கையிலேயே தங்கினான். இவனிலிருந்தே யாழ்ப்பாணத்தெழுந்த புதிய அரச பரம்பரை தோன்றியிருத்தல் வேண்டும். இவனுக்குப் பின் வந்த யாழ்ப்பாணத்து மன்னர் யாவரும் ஆரியச்சக்கரவர்த்தி என்னும்அரசபட்டப் பெயரைக் கொண்டு விளங்கினர்.”

செகராசசேகரன் :

கி.பி. 1380 ஆம் அண்டளவில் செயவீரசிங்கை ஆரியன் என்பவன் செகராசசேகரன் (ஐந்தாவது) என்னும் பட்டத்துடன் அரசனானான். இவனே செகராசசேகரம் என்னும் வைத்திய நூலையும், செகராசசேகரமாலை என்னும் சோதிட நூலையும், காரிவையாவின் கணக்கதிகாரம் என்னும் நூலையும், இயற்றுவித்தவன். 

தட்சண கைலாச புராணமும் இவன் காலத்திலேயே ஆக்கப்பட்டது. யாழ்ப்பாணத்த அரசர் பலருள்ளும் இச் செயவீரனே நடுநிலை தவறாத செங்கோற் சிறப்பாலும் படைவலியாலும் செந்தமிழ் அறிவாலும் சிறந்தவன். செகராசசேகரன் என்னும் பட்டப் பெயர் புனைந்த மற்றைய அரசர்களின் பெயர்கள் வழக்கிழந்தொழிய இவன் பெயர் மாத்திரம் மிகச் சிறந்து புகழ்பெற்று நின்றமையால் பிற்காலச் சரித்திரக்காரர் செகராசசேகரன் ஒருவனே என்று எழுதி விட்டனர்.

கி.பி. 1414 ஆம் ஆண்டளவில் செயவீரன் சகோதரன் குணவீர சிங்கையாரியன், பரராசசேகரன் என்னும் பட்டத்துடன் அரசனானான். இவனுக்குப் பின் இவன் மகன் கனகசூரிய சிங்கையாரியன் பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகதியில் சிங்கை நகரில் ஆட்சி புரிந்து வந்தான். அக்காலத்தில் (ஜயவர்த்தனபுரம்) கோட்டையை ஆண்ட ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுமாறு தனது வளர்ப்புப் பிள்ளையாகிய செண்பகப் பெருமாளை (சப்புமால் குமாரய) ஒரு செனையுடன் அனுப்பினான்.

செண்பகப்பெருமாள் :

இந்தச் செண்பகப்பெருமாள் அறாம் பராக்கிரமபாகுவின் தத்தபுத்திரனாவான் என்பது முதலியார், செ. இராசநாயகம் அவர்கள் கருத்தாகும். இவனைப்பற்றி முதலியார்  அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள் : 

“கோட்டை அரசனாகிய ஆறாம் பராக்கிரமபாகு சபைக்க மலையாளத்தேசத்திலிருந்து பணிக்கன் ஒருவன் வந்தான். அவனை அரசன் உபசரித்து, அவன் தேகவலியாலும் வாட்போர்த்திறத்திலும் ஈடுபட்டவனாய்த், தன் குலத்தினளாகிய ஒரு கன்னிகையை அவனு;கு மணம் முப்பித்தான். இப் பணிக்கனுக்குச் செண்பகப்பெருமாள் (சப்புமால் குமாரய), ஜெயவீரன் (அம்புலகலகுமாரய) எனவிரு குமாரர்கள் பிறந்தார்கள். பராக்கிரமபாகு தனக்குப் புத்திரர்கள் இல்லாமையால் இவர்களைத் தனது தத்த புத்திரர்களாக வைத்து வளர்த்து வந்தான். இஃதிங்ஙனமாக, பராக்கிரமபாகுவின் மகள் உலகுடையதேவி நன்னூர்த் துணையார் * என்பவனை மணந்து ஜெயவீரன் என்னும் மகனையீன்றாள். இந்நிகழ்ச்சி பராக்கிரமபாகுவின் எண்ணங்களை மாற்றிவிட்டது. 

தான் இறந்தபின் தத்த புத்திரர்களில் ஒருவன் இராச்சியத்துக்குவரின் தன் பேரப்பிள்ளைக்கு அரச பதவி இல்லாது போய்விடும் என்ற அச்சத்தால் பராக்கிரமபாகு அவ்விரு குமாரர்களையும் அகற்ற வேண்டுமென எண்ணி, வன்னியர்களை யடக்கி, யாழ்ப்பாண அரசனையும் வென்று வருமாறு செண்பகப்பெருமாளை அனுப்பினான். 

இவர்கள் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்று பராக்கிரமபாகு கருதினான். செண்பகப்பெருமாள் பிரபலம்பெற்ற குதிரை வீரன் ; உருவத்தால் இராட்சதனைப்போலும் காத்திரமுடையவன்; மகா பலங்கொண்டவன். தகுந்த படையுடன் வந்த இவன் கறப்புக்குதிரை மீதமர்ந்து, எதிரி படையுட் புகுந்து அநேகரைத் தன் வாளுக்கிரையாக்கி, தமிழ்ச் சேனையைப் புறங்கொடுத்தோடச் செய்தான். போர்க்குடைந்த கனகசூரியன் தன்  குடும்பத்தாருடன் இந்தியாவுக்கோடித் திருக்கோவலூரிற் கரந்துறைவானாயினான்.

“செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணத் தலைநகருட் புகுந்து, மாடமாளிகைகளைத் தரைமட்டமாக்கி, அநேக அதிகாரிகளைச் சிறைப்படுத்தி அவர்களுடன் ஜயவர்த்தன கோட்டைக்க மீண்டான். பராக்கிரமபாகு இவனை ‘ ஆரிய வேட்டையாடும் பெருமாள் ’ எனப் புகழ்ந்து, யாழ்ப்பாணத்தையே அரசுபுரியுமாறு அனப்பினான். 

பராக்கிரமபாகுவின் கபட சிந்தையை யறியாத செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணம் போய்ப் பழைய தலைநகர் பாழாய்விட்டமையினால், நல்லூரிலே கி.பி. 1450 அம் ஆண்டளவில் ஒரு புத நகர் எடுப்பித்துச் சிறீசங்கபோதி புவனேகவாகு என்னும் சிங்கள நாமத்தோடு பதினேழு வருடங்களாக அரச செய்து வந்தான். 

இவன் யாழ்ப்பாணத்தை வென்ற புகழ் சிங்கள நாடெங்கும் பரவிப் பேரானந்தத்தை விளைத்தது. இவ் வெற்றியைப் புகழ்ந்து ‘கோகிலசந்தேஸ’ என்னும் குயில்விடு தூதுப் பிரபந்தம் தேவி நுவரையைச் சேர்ந்த இருகல் கலத்திலக்க பரிவேனாதிபதி எனும் பெளத்த குருவினால் இயற்றப்பட்டது.”

செண்பகப்பெருமாள் ஆண்ட நகர் விசாலித்த தெருக்களும், உப்பரிகை பொருந்திய வீடுகளும், மாளிகைகளும், இராமன் கோயில் முதலிய கோயில்களும் உள்ளதாக இந்நூல் கூறுகின்றது.

புவனேகவாகு கட்டிய புராதன ஆலயம்

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டியவன் புவனேகவாகு என்பது “கைலாயமாலை” யில் வந்துள்ள பின்வரும் தனிச் செய்யுளால் அறியக்கிடக்கின்றது :

“ இலகிய சகாத்த மெண்ணூற் றெழுபதா மாண்ட தெல்லை
அலர்பொலி மாலை மார்ப னும்புவனேக வாகு
நலமிகும் யாழ்ப்பா ணத்துநகரிகட் டுவித்து நல்லைக்
குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித் தானே.”

இப் புவனேகவாக திரிசங்கபோதி எனவும் அழைக்கப்பட்டான் என்பது ஶ்ரீமான் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையவர்கள் எழுதிய ‘யாழ்ப்பாணச் சரித்திரத்தில், விசுவநாத சாஸ்திரியார் சம்பவக் குறிப்பு எனும் கையெழுத்துக் பிரதியிலிருந்த எடுத்துக் காட்டிய செய்யுளால் நன்கு புலப்படுகின்றது. அச் செய்யுள் வருமாறு :

“இலகிய சகாத்த மெண்ணூற் றெழுபத்து நான்கி
னலர்திரி சங்க போதி யாம்புவ னேக வாகு
நலமுறும் யாழ்ப்பாணத்து நகரி கட்டுவித்து
குலவியகந்தனார்க்குக் கோயிலொன்றமைப்பித்தானே.”

 இவன் தான் நல்லூர்க் கந்தசுவாமி கோயிற் கட்டியத்தில் இன்றும்,

சிறீமான் மஹாராஜாதிராஜ அகண்ட பூமண்டலப்ர
தியதிகந்தர விச்றந்த கீர்த்தி
சிறீ கஜவல்லி மாவல்லி சமேத சுப்பிரமண்ய
பாதாரவிந்த ஜநாதிரூட சோடச
மகாதான சூர்யகுல வம்சோத்பவ சிறீசங்க
போதி புவனேகவாகு
என்று போற்றப்படுகிறான்.

 தமிழ் அறிவு : 

மாவிட்டபுரக் கொயிலாதீனப் பிராமணர் சின்னமனத்துளார் என்பவர் இவ்வரசனுக்கு விருந்தளித்ததாகவும் அவ்விருந்தைப் புகழ்ந்து சில பாக்கள் பாடியதாகவும் ‘ யாழ்ப்பாண வைபவமாலை’ குறிப்பிடுகின்றது. அப்பாடல்களுள் ஒன்று பின்வருமாறு : 

“ சின்ன மனத்தான் செயும்விருந்திற் சாற்றுருசி
அன்னதனை விண்னோர் அறிந்திருந்தால் – முன்னலைவாய்
வெற்பதனைக் காவியுய்த்து வேலைகடைந் தேயுலைதல்
அற்பமெனத் தள்ளுவரே யாம்.”

இந்தச் செய்யுளை நோக்குமிடத்து செண்பகப் பெருமாள் சிறந்த தமிழ்ப் புலவனாக விளங்கினான; என்பது தேற்றம்.

யாழ்ப்பாணத்து இராசதானியாகிய நல்லூரைச் செண்பகப் பெருமாள் நன்கு திருத்தி, நல்லைக் கந்தவேள் ஆலயத்தையம் ஆக்குவித்தான். “செண்பகப்பெருமாள் தமிழ்க்குருதி தன் நாளங்களில் ஓடக் கொண்டவனாதலாலும், தமிழுற்பத்தியாளனேயாகிய அளகேஸ்வரன் காலந்தொட்டு ஜயவர்த்தன கோட்டையிலேயும் வழிபாடு பயின்று வந்தமையாலும், கோகில சந்தேசமுடையார் அவனைப் புத்தமத தாபகனெனப் புகழ்ந்தோதியவிடத்தும் தமிழ்ப் பிரசைகட்கிதமாய்த் தமிழ்த் தெய்வ வழிபாடுகளையே யாழ்ப்பாணத்தில் வளர்த்திருப்பான் என்பதிற் சிறிதும் சந்தேகமின்று” எனச் சுவாமி ஞானப்பிரகாசர் தாம் எழுதிய ‘யாழ்ப்பாண வைபவ விமர்சன’ த்திற் (பக்.107) கூறியிருத்தலும் ஈண்டு நினைவுகூர்தற்பாலது.

கி.பி.1467 ல் கொட்டையை யாண்ட ஆறாம் பராக்கிரமபாகு தன் பேரன் ஜெயவீரனுக்கு இலங்கையரசை யீந்து முடிசூட்டிச் சிலநாளில் இறந்தான். இதைக் கள்வியுற்ற செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்திலிருந்த புறப்பட்டுக் கோட்டைக்குச் சென்ற ஆங்கரசனாயிருந்த சிறுவனைக் கொண்று ஆறாம் புவனேகவாகு எனும் பெயருடன் கோட்டை யரசனானான்.

 நல்லூர் நல்ல ஊராதல் :

 “ஆறு முகனீ யடியார்க் கிரங்கியவர்
தேறு முறையருளுந் தெய்வதநீ – வேறுதுணை
இல்லேன் மிடியனைத்து மில்லார்க்கு வானமைந்தாய்
நல்லூர்ப் பதியி னயந்து.”

-நல்லை நான் மணிமாலை : –  குகதாசர் ச. சபாரத்தின முதலியார்

கனகசூரியன் மீண்டு வருதல் :

யாழ்ப்பாணத்தில் விஜயபாகு என்னும் சிங்களனொருவன் அரசனாகப் புவனேகவாகுவால் நியமிக்கப்பட்டான். இவன் ஆட்சிக்காலத்தில் கனகசூரியன் தன் புத்திரர்களுடனும் சேனைகளுடனும் யாழ்ப்பாணம் மீண்டும் வந்து, விஜயபாகுவுடன் போர் தொடுத்து அவனைக் கொன்று மீண்டும் தானே வட இலங்கை அரசனாகி நல்லூரில் இருந்தரசாண்டான்.

நல்லூர் – பெயர்க்காரணம் :

“சீர்விளங்க மேப்பதிக்குஞ் செப்புகின்ற சொற்பெயரே
யூர்விளங்க நாமமா நல்லூரே.”

தமிழ்நாட்டு ஊர்கள் நல்லூர் என்றும், புத்தூர் என்றும் வகுத்துக் கருதலாகும். பெண்ணையாற்றங் கரையில் அமைந்தது. திருவெண்ணெய் நல்லூர். அது சுந்தரமூர்த்தியைத் தடுத்தாட்கொண்ட ஈசன் கோவில் கொண்டுள்ள இடம். (‘பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் ’- சுந்தரர்).

சைவசமய ஞான நூலாகிய ‘சிவஞானபோத’ த்தை அருளிச் செய் மெய்கண்டதேவர் பிறந்தருளும் பேறு பெற்ற நல்லூரும் அதுவே. கும்பகோணத்துக்கருகே நல்லூர் என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அமர்நீதி என்னும் அடியார் அவ்வூரிலே தொண்டு செய்த சிவப்பேறு பெற்றார் என்று சேக்கிழார் கூறுகின்றார். 

மண்ணியாற்றங்கரையில் முரகவேளின் பெயரால் அமைந்த சேய்சல்லூர் இந்நாளில் சேங்கனூர் என்று வழங்கும். “சேயடைந்த சேய்ஞலூர்” என்பது தேவாரம். சூரனோடு போர்செய்யக் கருதி எழுந்த முருகவேள் சிவபெருமானை வழிபட்டுச் சர்வசங்காரப் படைக்கலம் பெற்ற ஸ்தலம் சேய்நல்லூர் (சேய்ஞலூர்) என்று கந்தபுராணம் கூறும். வடஆர்க்காட்டிலுள்ள மற்றொரு சேய்நல்லூர் சேனூர் எனப்படும்.

“தமிழ்நாட்டை ஆண்ட அரசர் பலர் தம் பெயர் விளங்குமாறு பல நல்லூர்களை உண்டாக்கினார்கள். பாண்டிநாட்டில் வீரபாண்டிய நல்லூர், அரிகேசரி நல்லூர், மானாபரண நல்லூர், செய்துங்க நல்லூர் முதலிய ஊர்கள் பாண்டியகுலத்தைச் சேர்ந்த மன்னர்பெயரை விளக்க நிற்கின்றன. சோழநாட்டிற் பெருஞ் சோழமன்னர்கள் உண்டாக்கிய நல்லூர்களைச் சாசனங்களிற் காணலாம். முடிகொண்ட நல்லூர், அநபாய நல்லூர், திருநீற்றுச் சோழநல்லூர், திருத்தொண்டத் தொகை நல்லூர், சிவபாதசேகர நல்லூர், கலிகடிந்த சோழ நல்லுஸர் முதலிய நல்லூர்கள் சொழமன்னரடைய விருதுப் பெயர் பெற்ற பதிகளாகும்.”

–ஊரும் பேரும் : – திரு.ரா.பி. சேதுப்பிள்ளை – பக். 31-32.

‘ திராவிட தேயத்துப் பழம்பெயர் பெற்றிருக்குந் தானங்கள்’ எனும் பொருள்பற்றி எழுதிய திரு. எஸ். டபிள்யு. குமாரசுவாமி அவர்கள் நல்லூரினையே முதற்கண் எடுத்துக் காட்டுகின்றார்கள். “ஈழத்திலேயம் நல்லூர் எனப் பெயரிய கிராமங்கள் ஐந்துள. மற்றைய நாலும் பூனகரியிலும், குருநாகற் பகுதியிலும், கழுத்துறையிலும் உள்ளனவாம். சிங்கள நாட்டிலுள்ளன ஆங்குப் பூர்வத்திற் குடியேறிய திராவிடரால் இடப்பட்டுப் பின்னர்ச் சிங்களராலே வழங்கப்படுகின்றமையின் நல்லூர, நல்லூரெ, நல்லூருவ எனச் சற்றே விகாரப்பட்டிருக்கின்றன” என இவ்வறிஞர் குறிப்பிட்டிருப்பது பொருள்பொதிந்த கருத்தாகும்.

நல்ல ஊர் :

கனகசூரியன் நல்லூர் நகரைச் சிறந்த இராசதானியாக்கப் பெருமுயற்சி செய்தான். இராச வீதிகளும், அரண்மனைகளும், அவற்றைச் சூழ்ந்து குதிரைப்படை, யானைப்படைக் கொட்டாரங்களும், சிங்கார வனமும், பட்டாலும் பருத்தி நூலாலும் நுண்ணிய தொழில் புரி மக்கள் இருக்கைகளும், தச்சர், கொல்லர், ஓவியக்காரர், பொன்செய்வினைஞர், இரத்தின வணிகர், புலவர், பாணர் இவர்களுக்கு வெவ்வே றிருக்கைகளும், வேதமோதும் அந்தணர் மந்திரங்களும், மருத்துவர், சோதிடர் வைகும் வளமனை வீதிகளும் அமைத்து நல்லூரை நல்ல ஊராகப் பிரபல்யமுறச் செய்தான்.

வெவ்வேறு தொழிலாளர் வாழ்ந்த வீதிகள் அவர்களின் பெயரால் இன்றும் வழங்கப்படுகின்றன. மேலும் இவர்களுக்கெனப் பல குளங்களும் தலைநகரில் அமைக்கப்பெற்றன. 

அடியார்க்குநல்லார் குளம் அல்லது கண்ணாதிட்டிக்குளம் அம்மைச்சிகுளம் அல்லது அம்பச்சி குளம், அஞ்சுதேவன்குளம் அல்லது வட்டக்குளம், ஆரியக்குளம், இலந்தைக்குளம், இளம்பிள்ளையார் கோயிற்குளம், உப்புக்குளம், கற்குளம், சின்னக்குளம், தாமரைக்குளம், தேவரீர்குளம் (தாராக்குளம்), நரியன் குண்டுக்குளம், நாயன்மார்குளம், நெடுங்குளம், பண்டாரக்குளம், பூதராயர் அல்லது கல்லவிராயகுளம், பரவைக்குளம், பாற்குளம், பிரப்பங்குளம், பிராமண கட்டுக்குளம், புல்லுக்குளம், அல்லது புளுக்குளம் (மணிக்கூட்டுக் கோபுருத்தடி), மக்கிக்கிடங்குக்குளம், மக்கியக்குளம், மறவக்குளம், முதலிக்குளம், மூன்றுகுளம், யமுனாரி, வண்ணாண்குளம் (இப்பெயருடன் மூன்று குளங்கள் உண்டு) முதலிய குளங்கள் ஆங்காங்கே வாழும் மக்களுக்கு நீர் வசதிகளை அளித்து வந்தன.

சிங்கைப் பரராசசேகரன்:

கனகசூரியனுக்குப் பின் அவன் மகன், சிங்கைப்பரராசசேகரன் எனும் நாமத்தோடு கி.பி. 1478ஆம் ஆண்டளவில் அரசனானான். இவன் தந்தையினும் சிறந்தவனாய் நல்லூர் இராசதானிக்கு வடபாலில் சட்டநாதர் கோயிலையும், குணபாலில் வெயிலுகந்த பிள்ளையர் கோயிலையும், தென்பாலில் கைலாயநாதர் ஆலயத்தையும், குடதிசையில்  வீரமாகாளியம்மன் ஆலயத்தையுங் கட்டுவித்துத் தன் தலைநகரை முன்னையிலும் அணிபெற விளங்கவைத்தான்.

கந்தசுவாமி கோயிலுக் கண்மையிற் பகர வடிவினதாய ஓர் ஏரி அமைப்பித்து, யமுனா நதியின் திவ்ய தீர்த்தத்தைக் காவடிகளிற் பெய்வித்து, அதனை யமுனையேரி (யமுனாரி) எனப் பெயர் தந்தழைத்தான். இந்த முப்புடைக் கூபம் இப்பொழுது நல்லூர்க் கிறீஸ்தவ தேவாலயத்துக்கண்மையில் உள்ளது. இதுவே தீர்த்தக் கேணியாக உபயோகிக்கப்பட்டதெனக் கருதப்படுகின்றது.

இங்ஙனம் ஆரியச்சக்கரவர்த்திகள் நல்லூரிலிருந்து அரசாண்ட காலத்தில் முடியுரை மன்னரும் சென்று தலைவணங்கும் தலைசிறந்த ஆலயமாக நல்லூர்க் கந்த சுவாமி கோயில் விளங்கியது. அக்காலத்தில் இதன் சிறப்பு இத்தகைத்தென்று இயம்ப முடியுங்கொல்!

முன் செண்பகப்ருமாள் வெற்றிகொண்டபோது சிதைத்த தழிழ்ச் சங்கத்தை மீண்டும் தாபிக்க விரும்பி, இவன் புலவர்களை ஒருங்கு சேர்த்து முன்போற் கழகம் நிறுவி, வித்துவான்களுக்கு வேண்டிய சன்மானங்கள் செய்து, தமிழ் மொழியைப் பொன்போற் பேணி வளர்த்து வந்தான். இவன் அவையில் இவன் மைத்துனரும், வடமொழி தென்மொழியாகிய இருமொழிகளிலும்; வல்ல புலவருமாகிய அரசகேசரி, ‘இரகுவம்சம்’ எனும் நூலை வடமொழியிலிருந்து பெயர்த்துத் தமிழிலாக்கி அரங்கேற்றினார். 

இவர் நல்லூரிலேயே வாழ்ந்து வந்தார். ‘பரராசசேகரன் உலா’வும் இவ்வரன் காலத்திலேதான் ஆக்கப்பட்டது. நீர்வேலியிலுள்ள அரசகேசரிப் பிள்ளையார்கோயிலும், நல்லூரிலுள்ள அரசகேசரி வளவும் இப்புலவரின் பெயரை எங்களுக்கு இன்றும் ஞாபகப்படுத்தும் சின்னங்களாகவுள்ளன. இந்த அரசகேசரி எதிர்மன்னசிங்கப் பரராசசேகரன் காலத்தில் (பதினாறாம் நூற்றாண்டு) வாழ்ந்தவன் என்பது சுவாமி ஞானப்பிரகாசர் கருத்தாகும். 

சிங்கைப் பரராசசேகரனுக்குப் பின் ஆண்ட யாழ்ப்பாணத்தரசர்களும் இக்கோயிலின் பரிபாலனத்தில் அக்கறை எடுத்து வந்தனர் என்பது கூறாதேயமையும். எனவே முடிமன்னரும் சைவப் பொதுமக்களும் சுந்தர நல்லூரில்வாழ்  சோதி வடிவேல் பிடித்த கந்தனை வந்தனை செய்து வந்தனர்.

போர்த்துக்கீசர் காலம் : 

பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அதாவது 1560ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆந் திகதி கொன்ஸ்தாந்தீனு தே பிறகன்சா என்ற படைத் தலைவனின் தலைமையில் போர்த்துக்கீச கப்பற்படை யாழ்ப்பாணக் களப்பில் (கரையூர்) நங்கூரம் போட்டது. 

1200 பேரைக் கொண்ட பறங்கிப் படையினர் கரையில் நின்ற தமிழ்ப்படையை வென்று, நல்லூர் நகர் மதிலை உடைத்து உட்சென்றனர். சங்கிலி அரசன் கோப்பாய்க்கு ஒளித்தோடினான். பின்னர் போர்த்துக்கீசர் இவ்வரசனுடன் சமாதான உடன்படிக்கையை செய்து மீண்டனர்.


யாழ்ப்பாணத்தரசன் போர்த்துக்கீசரை ஒதுக்கிவிட முயற்சி செய்வதை மன்னாரிலிருந்த போர்த்துகீச தளபதி கோவை அதிபதிக்கறிவித்தான். அதனால், அந்திரேபூர்த்தாடு தே மென்டொன்சா என்னும் தளபதி பெரிய கப்பற் படையுடன் 1591ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி கொழும்புத்துறையி லிறங்கினான். யாழ்ப்பாணத்தரசனுடைய படை வீரர் எதிர்த்துப் போராடியும், அவர்கள் இறங்குவதைத் தடுக்க முடியவில்லை. ஒக்ரோபர் மாதம் 28ஆம் திகதி பறங்கிப்படை நல்லூரை  நோக்கி நடந்தது.

சைவசமயிகளின் தியாகம்:

தங்கள் நாட்டை அந்நியர் கைப்பற்றாமற் காப்பதில் தங்கள் உயிரையும் ஒருபொருளாக மதியாது யுத்தஞ் செய்யத் தமிழர் திரண்டெழுந்தனர்,  சைவக் கோயில்களை அழியாமற் காக்கவேண்டுமானால், அந்நியர்களை ஒதுக்கவேண்டு மென்று சைவர்கள் வீராவேசத்துடன் போர்புரிந்தனர். 

கோயிற் பூசர்கள், யோகிகள் முதலியோரும் இதில் ஈடுபட்டனர். பறங்கிப்படை முன்றேிச் செல்ல, வீரமாகாளியம்மன் கோயிலுக்கும் கந்தசுவாமி கோயிலுக்கும் இடையில் அரசனின் மெய்காப்பாளர்களாகிய மகா வீரர்களைக் கொண்ட அத்தப்பத்துப்படை தங்கள் உயிரைக்கூட வெறுத்துச் சத்துருக்களை எதிர்த்துப் போராடியது அக் கடும் போரிற் கலந்த தமிழரெல்லாம் மாண்டனர். இவர்களை உற்சாகப்படுத்தி நின்ற யோகியும் மாண்டார்.பெரிய ஆலயத்து (கந்தசுவாமி கோயிற்) பிராமணரும் மாண்டார்.

கந்தசுவாமி கோயிலை அழித்தல் :

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலையும் ஏனைய சைவக் கோயில்களையும் பாதுகாக்கச்  சைவர்கள் தம் உயிரையே தியாகஞ் செய்தார்கள். இதன் பின்னரும் இடைக்கிடை தமிழர் தஞ்சாவூர்ப் படைகளினுதவியுடன் பறங்கிகளுக்கெதிராகக் கிளம்பியும் வெற்றிபெற முடியவில்லை. 

யாழ்ப்பாணத்தரசர்களும் ஒழுங்காகத் திறை கொடுத்துவரவில்லை. எனவே கொழும்பிலிருந்த போர்த்துக்கீசத் தேசாதிபதி கொன்ஸ்தாந்தீனு தெசா என்பவன் பிலிப்தெ ஒலிவெறா எனும் வீரசூரத் தளபதியை யாழ்ப்பாணத்துக்கனுப்பினான். இவன் யாழ்ப்பாணத்தரசனைச் சிறைப்படுத்தி, 1621ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 2ஆந் திகதி நல்லூரைத் தனது உறைவிடமாக்கினான். 

இவன் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைத் தரைமட்டமாக்கி, அஃது இருந்த இடமுந் தெரியாமல் அத்திவரத்தையும் கிளறிவிடும்படி கட்டளையிட்டான். ஊரவர்கள் மனம் நொந்து வருந்தி ஓலமிட்டனர். இக் கோயிலை அழியாமல்விட்டால் அவன் கேட்ட வற்றையெல்லாம் தருவதாகப் பலமுறை கூறினர். 

போர்த்துக்கீச வன்கணாளன் இவற்றிற்குச் செவிமடுக்காது நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைத் தரைமட்டமாக்கினான். அந்தோ! சைவசமயத்தின் அரணாகவிருந்த கோயில் அழிந்தமை சைவசமையம் குன்றுங் காலம் ஆரம்பித்துவிட்டதற்கு அறிகுறிபோலும், சைவ மன்னர்கள் தாபித்து தலைவணங்கி வந்த பெருங் கோயில் அவர்கள் ஆட்சிமுடிவடையவே அக்கோயிலும் தரைமட்டமாயிற்று, நல்லூர்க் கந்தன் ஆலயத்தை அழித்துவிட்டதால், அப்பெருமான் வழிபாட்டையும் வேருடன் ஒழித்துவிட்டதாகப் பகற்கனவு கண்டான் ஒலிவேறா.

“நல்லைக் கந்தசுவாமி கோயிலை இடிக்குமுன் அதன் மெய்காப்பாளனா யிருந்த சங்கிலி என்னும் சைவப் பண்டாரம் அக் கோயில் விதானங்கள் வரையப்பட்டிருந்த செப்புச் சாசனங்களையும் திருவாபரணங்களையும் கொண்டு மட்டக்களப்புக்கு ஓடினான். 

அங்கிருந்த சிலாவிக்கிரகங்களை எல்லாம் அக்கோயிற் குருக்கள்மார் பூதராயர் கோயிலுக்குச் சமீபத்திலுள்ள குளத்தில் புதைத்துவிட்டு நீர்வேலிப்பகுதிக்கு ஓடினர்.” என ஶ்ரீமான் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் தமது நூலிற் கூறியுள்ளார்கள்.

 ஒல்லாந்தர் காலம் : 

1658ஆம் ஆண்டு ஜீன் மாதம் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கைவசமாயிற்று. இவர்கள் புறொட்டஸ்தாந்த கிறீஸ்தவ மதத்தைப் பரப்புவதிலும் அதற்குரிய தேவாலயங்களை நிறுவுவதிலும் ஈடுபட்டனர். நல்லூர் கந்தசுவாமி கோவில் இருந்த இடத்திலே கிறீஸ்தவ தேவாலயம் அமைக்கப்பெற்றது.

தற்போதுள்ள கந்தசுவாமி கோயிலுக்குத் தென்கபுறமாகக் கிழக்கு நோக்கிச் செல்லும் தெருவழியாகச் சிறிது தூரம் சென்றதும், பண்டாரமாளிகை என்ற பெயர்  ஒரு வாயிற்றூணிற் காணப்படுகின்றது. இது யாழ்ப்பாணத்தரசர்களுள் ஒருவரான பரராசசேகர பண்டாரத்தை நினைவுீட்டுகின்றது.

இது இப்போது கோயிலுக்குச் சேர்ந்த தென்னந்தோப்பாகவே இருக்கிறது. இதன் விஸ்தீரம் 6ஏக்கர். இங்கே யாழ்ப்பாணத்தரசனுடைய மாளிகை ஒன்றிருந்ததெனக் கருத இடமுண்டு. இம் மாளிகையின் வடபாகமாகப் பண்டாரக்குளம் எனப் பெயரிய குளம் ஒன்றுண்டு. இக்குளத்திற்கருகாமையிற் பழைய கட்டடச் சிதைவுகள் காணப்படுகின்றன.

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1748) ஒல்லாந்தர் பிரபு ஒருவர் இந்த மனோரம்மியமான இடத்தைத் தமது வாசஸ்தலமாகக் கொண்டிருந்தார். இதற்குச் சான்றாக ஒரு சிறு படிக்கல் காணப்பட்டது.

(Hearten Lust – Heart’s Desire – மனோரம்மியம்)

1782இல் யாழ்ப்பாணத்தில் ஹாவ்னர் என்பவர் நல்லூர் வர்ணிக்க முடியாத அழகுவாய்ந்த நகரம் எனவும், யாழ்ப்பாணப் பட்டினத்திலுள்ளவர்கள் உல்லாசமாகப் பொழுதுபோக்க நல்லூரை நாடுவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒல்லாந்தர் காலத்தில் 1697இல் யாழ்ப்பாணத்தைத் தரிசித்த கெறிற் டீ ஹேர் (Gerrit De Heere) எனும் இலங்கைத் தேசாதிபதி தமது தினசரி சம்பவக் குறிப்பில் பின்வருமாறு எழுதியுள்ளார் :

 Diary of occurrences during the tour of gerrit De
Heere,Governor of Ceylon from Colombo to Jaffna July 9 to September 3, 1697

யாழ்ப்பாண அரசாங்க ஏசண்டர்களின் தினசரிக் குறிப்புப் புத்தகங்களைத் தேடி, எனக்குத் தேவையான குறிப்புக்களை எடுப்பதற்குத் சலியாது உழைத்துப் பேருதவி புரிந்தவர் என் நண்பரும், முன்னாள் காரியாதிகாரியும், இப்போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க உதவி அதிபருமான திரு.எஸ். பெருமையினார் அவர்கள் , இவ்வறிஞருக்கு எனது மனமார்ந்த நன்றி யுரித்தாகுக.

“1697ஆம் ஆண்டு ஜீலை மாதம் 22ஆந் திகதி திங்கட்கிழமை பிற்பகல் தேசாதிபதி யாழ்ப்பாணப்  பட்டினத்திலிருந்து புறப்பட்டு நல்லூரிலுள்ள கொம்பனியின் தோட்டத்திற்குச் சென்று தங்கினார்.”

இவர் தங்கிய இடம் பண்டார மாளிகையாக இருக்கலாம் என யூகிக்க இடமுண்டு. எனவே போர்த்துக்கீசத் தேசாதிகளைப் பின்பற்றி ஒல்லாந்தத் தேசாதிபதிகளும் நல்லூரையே தாம் தங்குவதற்கச் சிறந்த இடமாக தெரிந்தெடுத்தனர். பண்டாரக்குளத்திற்கு மேற்குப்பக்கமாக ஒரு பெரு நிலப்பாகம் உண்டு. இதற்கு அரச வெளி என்று பெயர். இஃது அக்காலத்தில் முற்றவளியாக இருந்தது.

கொழும்பிலுள்ளவர்கள் தங்கள் வார இறுதி நாட்களை, அதாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளைக் கல்கிசையிற் கழிப்பதை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டிருப்பது போலவே, யாழ்ப்பாணத்தில் வசித்த ஒல்லாந்தர் நல்லூரை வார இறுதியில் பொழுதுபோக்கும் நந்தவனமாகக் கொண்டார்கள்.

அழிபாடுகள் :   

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்திததுறைக்குச் செல்லும் பாதையில் ஏறக்குறையய இரண்டரைமல் தூரத்தில் சங்கிலித்தோப்பு எனப் பெயரிய தென்னந்தோப்பு உண்டு. இந்நகரின் அரண்மனை இங்கிருந்தபடியால், இது இப்பொழுது சங்கிலித்தோப்பு என்று வழங்கப்படுகின்றது. யமுனாரி எனப்படும் பகர வடிவமுள்ள சிறந்த கேணியும் இத் தோப்பு எல்லைக்குள்ளேயே உண்டு. நல்லூரில் இருந்து ஆட்சி செய்த அரசர்களும் அரசிகளும் நீராடிய ஏரி இதுவேயெனச் சரித்திர அறிஞர் திரு. ஜே. பி. லூயி கருதுகின்றார். 

இந்தக் கேணியின் கிழக்குப் பாரிசத்திலும், மேற்குப் பாரிசத்திலும் ஆடவரும் மகளிரும் நீராடினர் என்றும், இதன் தென்கோடியில் ஆடைகள் மாற்றியணிவதற்கான மண்டபம் இருந்திருந்திருத்தல் வேண்டும் எனவும் இவ்வறிஞர் கருதுகின்றார். யமுனா நதியிலிருந்து தமிழ் மன்னர் சிலர் பட்டாபிசேகத்திற்காக    கொணர்ந்த தீர்த்தம் விடப்பட்ட ஏரியாதலின் யமுனா ஏரி எனப் பெயர் பெற்றதெனவும் கூறுவர் வேறுசிலர்.

தெருவோரத்திற் காணப்படும் கட்டடம் சங்கிலி மன்னன் கட்டிய அரண்மனை வாயில் எனப் பொது மக்கள் கருதுகின்றார்கள். ஆனால் இது டச்சுக் கட்டடம் என ஜே. பி. லூயி சுவாமி ஞானப்பிரகாசர் போன்ற சரித்திர அறிஞர் கருதுகின்றார்.
Name

Amman,2,Jaffna,10,Nallur,39,Nallur 2019,12,Nallur 2021,3,Nallur 2022,5,Nallur2020,23,News,1,Temples,1,ஆலயதரிசனம்,1,சந்நிதி முருகன்,1,மாவிட்டபுரம் கந்தசுவாமி,1,முருகன்,23,வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில்,2,
ltr
static_page
Nallur Kandaswamy Kovil: ஆலய வரலாறு
ஆலய வரலாறு
The historic Kandaswamy Temple stans at Nallur 1 1/2km from Jaffna on the Point Pedro Road. The temple was built in the 15th century, by Sanpaha Perumal the adopted son of Bhuvanekababhu, the king of Kotte, who led an expedition to the North and brought Jaffna under the suzerainty of Kotte. Having established himself as the ruler of the Jaffna Kingdom, Sanpaha Perumal set about the task of building the city and erecting the temple. Then he appointed Vijayabahu as the ruler and returned to Kotte. After some time, the deposed king Kanagasuriyan attacked and drove away the invader, He and his descendants managed the Nallur Temple up to the arrival of the Portuguese. Bhuvanekabahu’s name nae is still mentioned by the ssher on ceremonial occasins
Nallur Kandaswamy Kovil
https://www.nallur.lk/p/nallur-kandaswamy-kovil-history.html
https://www.nallur.lk/
https://www.nallur.lk/
https://www.nallur.lk/p/nallur-kandaswamy-kovil-history.html
true
8422810633332281055
UTF-8
அனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy